வால்பாறை:வால்பாறையில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில், வாகன போக்குவரத்தால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் தவித்தனர். சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது.இந்ந பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நகராட்சி சார்பில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் பள்ளி, மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில், நகராட்சி அலுவலகம் முதல் காந்சிசிலை வரை ரோட்டின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டது.இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் பயனடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், நடைபாதையை பயன்படுத்த முடியாமல் ரோட்டில் நடந்து செல்கின்றனர். இதனால், மீண்டும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை நகரில், சுற்றுலா பயணியர் வருகை அதிரித்துள்ள நிலையில், அதிக அளவில் வாகன போக்குவரத்தும் உள்ளது. குறுகலான ரோட்டில், டூவீலர் முதல் கனரக வாகனங்கள் வரை செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, வால்பாறை நகரில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் நிம்மதியாக நடந்து செல்லும் வகையில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.