* குப்பையை எடுங்க
பொள்ளாச்சி, அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பையை மூட்டைகளாக கட்டி அகற்றப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், மருத்துவமனை வரும் பயனாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, இங்கு சேகரிக்கப்பட்ட குப்பையை விரைவில் அகற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- பாலாஜி, பொள்ளாச்சி. *புதரை அகற்றுங்க
பொள்ளாச்சி, வக்கம்பாளையம் வாழைதோட்டத்து சாலை அருகே, கழிவு நீர் செல்லும் இடத்தில் புதர் மண்டி உள்ளது. இதனால் இந்த ரோட்டில் செல்லும் பயணியர் சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி இந்த கழிவு செல்லும் இடத்தில் உள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.- -டேனியல், பொள்ளாச்சி. வேகத்தடை அமையுங்க
பொள்ளாச்சி, அரசு மருத்துவமனை முன் உள்ள ரோட்டில், வாகனங்கள் அதிக வேகமாக செல்கின்றன. இதனால், அரசு மருத்துவமனை செல்லும் பயணியர்க்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. ரோட்டை கடக்கவும் சிரமம் ஏற்படுவதால், இங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ரமேஷ், பொள்ளாச்சி. திறந்த வெளியில் சாக்கடை
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் டீச்சர்ஸ் காலனி அருகே உள்ள ரோட்டில், பாதாள சாக்கடை கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.-- கண்ணன், பொள்ளாச்சி. மின் கம்பங்கள் சேதம்
கிணத்துக்கடவு, மயானம் செல்லும் வழியில் உள்ள இடத்தில் மின் கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் தெரியும் படி உள்ளது. மேலும், இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதால் மின் வாரிய அதிகாரிகள் இதை கவனித்து உடனடியாக புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.-- சசி, கிணத்துக்கடவு. * மேம்பால ரோட்டில் பள்ளம்
உடுமலை மூணார் சாலையில், ரயில்வே மேம்பாலத்தில் ரோட்டின் ஓரத்தில் சிறு சிறு பள்ளம் உள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரோட்டிலள்ள பள்ளத்தை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுரேஷ், உடுமலை. * துார்வார வேண்டும்
உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழைநீர் வடிகால் புதிதாக அமைக்கப்பட்டது. அதில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வடிகாலை நகராட்சியினர் துார்வாரி கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன், உடுமலை. தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, திருப்பூர் ரோடு வி.ஜி ராவ் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் வாகன ஒட்டுநர்கள் பிரதான சாலையில் செல்வதற்கு அச்சப்படும் நிலையில் இருள் சூழ்ந்துள்ளது. ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகளும் அதிகம் நடக்கிறது.- பாஸ்கர், உடுமலை. சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, ஆசாத் வீதியில் குப்பைக்கழிவுகள் ரோட்டோரத்தில் குவிக்கப்பட்டுள்ளன. திறந்த வெளியில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. தெருநாய்கள் கழிவுகளை இழுத்து வந்து வீடுகளின் முன்பு குவிப்பதால் அப்பகுதி முழுவதும் அசுத்தமாகிறது.- தேவிகா, உடுமலை. சேதமடைந்த ரோடு
உடுமலை, நெல்லுக்கடை வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. வாகனங்கள் ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.- ரவிக்குமார், உடுமலை. ரோடு போடவில்லை
கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆர்.வி.ஜி., நகரில் ரோடு போடுவதற்கு மண் நிரப்பப்பட்டு பல நாட்களாகியும் ரோடு போடப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மழை பெய்யும் நாட்களில் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் செல்வதற்கும் முடியாமல் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன.- ரங்கநாதன், கணக்கம்பாளையம்.