UPDATED : மார் 22, 2024 12:59 PM |  ADDED : மார் 22, 2024 12:59 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
மேட்டுப்பாளையம்;சீரான குடிநீர் வழங்க கோரி, வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சிறுமுகை அருகே, அன்னூர் சாலையில், மறியல் செய்தனர். காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெள்ளேபாளையம் ஊராட்சி.   ஆறு ஊராட்சிகளின் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து, இந்த ஊராட்சிக்கு குடிநீர்  வழங்கப்படுகிறது.  பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால், கடந்த நான்கு நாட்களாக, ஆறு ஊராட்சிகளின் குடிநீர் திட்ட க்கும், மூளையூர் நீரேற்று நிலையத்திலிருந்து, தண்ணீர் பம்பிங் நடைபெறவில்லை. போதிய குடிநீர் கிடைக்காததால், பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, பொது மக்கள் அன்னூர், அவிநாசி, சூலூர் கூட்டு குடிநீர் திட்ட  நீரேற்று  நிலையம் முன்பாக, சிறுமுகை அன்னூர் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் நீரேற்று நிலையம் அருகே, பொது குடிநீர் குழாய் ஒன்று போடப்படும். ஊராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர். அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டனர்.  இதனால் சிறுமுகை - அன்னூர் சாலையில் இரண்டு மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.