| ADDED : ஜூன் 26, 2024 10:47 PM
கோவை : தேசிய போட்டியில் பங்கேற்கும், தமிழக ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான தேர்வு, இன்று முதல் நடக்கிறது. திறமையுள்ள கோவை வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கலாம். இது தொடர்பாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய அளவிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான தேர்வு, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது. அதன் படி, ஜூனியர் பெண்கள் அணிக்காக தேர்வு வரும், 27, 28 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் என்.பி.ஆர்., கல்வி நிறுவனங்களில் நடக்கவுள்ளது. இதில், 1.1.2008 முதல் 31.12.2010 வரை பிறந்த வீராங்கனைகள் பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவியருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இன்று மாலை 4:00 மணிக்கு, என்.பி.ஆர்., கல்லுாரியில் நடைபெறுகிறது. விவரங்களுக்கு, 96006 69964, 98941 69721 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் மாணவர்களுக்கான தேர்வு, வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இத்தேர்வில், 1.1.2009 முதல் 31.12.2010 வரை பிறந்த வீரர்கள் பங்கேற்க தகுதியானவர்கள். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, 27ம் தேதி(இன்று) ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது. விவரங்களுக்கு, 86678 32640, 99524 52864 ஆகிய எண்களில் அழைக்கலாம். பங்கேற்க வரும் வீரர் - வீராங்கனைகள் ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி மார்க் ஷீக் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.