| ADDED : ஜூன் 03, 2024 01:26 AM
கோவை;புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், விடுபட்ட மாணவிகளின் பட்டியல் தொகுத்து பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள, கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், 6 முதல் பிளஸ்2 வரை படித்து, உயர்கல்வி தொடரும் மாணவர்களுக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை புதுமைப்பெண் திட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், தகுதியுள்ள சில மாணவிகளின் பெயர், பல்வேறு காரணங்களால் விடுபட்டுள்ளது.கல்லுாரிகளில் மூன்றாமாண்டு படித்து முடித்துள்ள மாணவிகளில், விடுபட்டவர்களுக்கும், இரண்டாமாண்டில் விடுபட்டவர்களின் பெயர்களை இணைக்க, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் வீரமணி கூறுகையில், ''புதுமைப்பெண் திட்டத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு, மொபைல் எண் போன்றவற்றை சமர்ப்பிப்பதில் சில மாணவிகள் கவனக்குறைவாக உள்ளனர்.விடுபட்டவர்களை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கல்லுாரியில் அனைவரையும் இணைத்து விட்டோம். முதலாமாண்டு மாணவர் சேர்க்கையின் போதே, புதுமைப்பெண் சார்ந்த தகவல்களையும் பெற்றுவிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.