உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்திரப்பதிவுக்கு டோக்கன் பெறுவதில் சிக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திணறல்

பத்திரப்பதிவுக்கு டோக்கன் பெறுவதில் சிக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திணறல்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் உள்ள 'லே-அவுட்'கள் பத்திரப்பதிவுக்கு மொத்தமாக முன்பதிவு செய்து டோக்கன் பெறுவதால், மற்றவர்கள் டோக்கன் பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள், வீடு, மனை போன்றவை வாங்கவும், விற்கவும் பத்திரப்பதிவு செய்ய முன்பதிவு செய்து 'டோக்கன்' பெற்று, சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்கின்றனர்.தினமும், 100 டோக்கன் இணைய வழியாக பதிவு செய்யபடுகிறது. மற்றும் தட்கல் முறையில் டோக்கனுக்கு, 5 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணமாக உள்ளது. இந்த டோக்கன் நாள் ஒன்றுக்கு 10 வழங்கப்படுகிறது.கிணத்துக்கடவில், தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் 'லே - அவுட்' மனை மற்றும் வீடு விற்பனை அதிகரித்து வருவதால், நாள்தோறும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டமாக இருக்கும்.இப்படி இருக்க, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள 'லே-அவுட்'டை சேர்ந்த சிலர் மொத்தமாக 100 டோக்கன்களையும் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், ஆடி மாதம் முடிந்துள்ளதால், அடுத்தடுத்து வரும் முகூர்த்த நாட்களிலும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் மக்கள் பலர் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.மக்கள் கூறியதாவது:வீடு மற்றும் மனைகளை பத்திரப்பதிவு செய்ய வெளியூரில் இருந்து பலர் வருகின்றனர். ஆனால், முக்கிய நாட்களில் டோக்கன் முன்பதிவு செய்ய முடியாமல் போகிறது. மேலும், சிலர் கடன் வாங்கி பத்திர பதிவு செய்கின்றனர். இவர்களுக்கும் டோக்கன் கிடைக்காமல் போகிறது.எனவே, வேறு வழி இல்லாமல் தட்கல் முறையில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து டோக்கன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மொத்தமாக டோக்கன் பதிவு செய்யும் 'லே-அவுட்' மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !