| ADDED : மே 24, 2024 05:45 AM
கோவை : கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரு குழந்தைகள், மின்சாரம் தாக்கி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை சரவணம்பட்டி துடியலுார் ரோட்டில், சின்ன வேடம்பட்டி அருகே ராணுவ வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 'ராமன் விகார்' எனும் குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பார்ட்மென்ட் வளாகத்தில் பூங்காவும் உள்ளது. இப்பூங்காவில், நேற்று மாலை, ஏராளமான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு குடியிருக்கும், பிரசாந்த் ரெட்டியின் மகன் ஜீயானஸ்,6, மற்றும் பாலசுந்தர் எனபவரின் மகள் வியோமா பிரியா, 8 ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.பூங்காவில் சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இருவரும் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதுகுறித்து அங்கு விளையாடிய குழந்தைகள், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகளை மீட்ட பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.முதற்கட்ட விசாரணையில், குழந்தைகள் விளையாடிய சறுக்கு அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கியது தெரியவந்துள்ளது. விசாரணையில், இக்குடியிருப்பு கட்டி விற்பனை செய்யப்பட்ட பின், முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும், அங்கிருந்த மின்சார ஒயர்கள் சேதமடைந்து இருப்பது குறித்து தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.