கோவை : 'வலுவான, வளமான பாரதத்துக்கு, 100 சதவீத ஓட்டுப்பதிவு' எனும் தலைப்பில், இன்று (ஏப்., 6) மதியம், 2:00 மணிக்கு சூலுாரிலும், மாலை, 6:00 மணிக்கு பல்லடத்திலும் சிறப்பு கருத்தரங்கு நடக்கிறது; அனுமதி இலவசம்.தமிழகத்தில் வரும் 19ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும், தேர்தல் கமிஷனும் பல வகையில் பிரசாரம் செய்தாலும், 100 சதவீத ஓட்டுப்பதிவு எந்த தேர்தலிலும் சாத்தியம் ஆவதில்லை.வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இத்தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.கடந்த 2019 தேர்தலில், கோவை லோக்சபா தொகுதியில், 19.58 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இதில், 12.45 லட்சம் வாக்காளர்களே ஓட்டளித்தனர்; 7.08 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை. அதே நேரம், போட்டியிட்ட வேட்பாளர்களில், அதிக ஓட்டு பெற்ற வகையில், 5.71 லட்சம் ஓட்டு பெற்றவர், எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். இதுவே, தேர்தல் கமிஷன் நடைமுறை என்றாலும் கூட, மொத்த வாக்காளர்களில், 13.87 லட்சம் வாக்காளர்கள், அவரை தேர்வு செய்யவில்லை என்பதே, நிதர்சனமான உண்மை.அதனால், 'வலுவான, வளமான பாரதத்துக்கு, 100 சதவீத ஓட்டுப்பதிவு' என்கிற தலைப்பில், சுயேட்சை வேட்பாளர் எம்.ராமச்சந்திரன் என்பவர் சார்பில், சிறப்பு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், சூலுார் கலங்கல் ரோட்டில், குருவம்மாள் நகரில் உள்ள, டாக்டர் ஆர்.சி.ஆனந்தி மஹாலில், இன்று (ஏப்., 6) மதியம், 2:00 மணிக்கு, இந்நிகழ்ச்சி நடக்கிறது. பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ், பத்திரிகையாளர் ஸ்ரீனிவாசன், அரசியல் விமர்சகர் பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். அனுமதி இலவசம்.இதே நிகழ்ச்சி, இன்று மாலை, 6:00 மணிக்கு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளுக்கு, கொங்கு தமிழ் சங்கமம், 'தமிழ்நாடு டயலாக்ஸ்' ஆகிய அமைப்புகள், ஆதரவு அளித்துள்ளன.