8ம் வகுப்பு மாணவன் துணிச்சலால் உயிர் பிழைத்த 2 வயது சிறுமி
பாலக்காடு: பாலக்காடு அருகே, 8ம் வகுப்பு மாணவனின் துணிச்சலான செயலால், இரண்டு வயது சிறுமி உயிர்காக்கப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தூதா பகுதியைச் சேர்ந்த அனில்- -- உமா தம்பதியரின் மகன் அமல்கிருஷ்ணா, 13. மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரி வைக்கத்துார் பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ள அமல்கிருஷ்ணா, அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி பள்ளி விடுமுறையை முன்னிட்டு, வீட்டின் மிக அருகே உள்ள ஓடைக்கு அதுல்கிருஷ்ணா நண்பர்களுடன் குளிக்கச் சென்றனர். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பைசல் - ஹஸ்மா தம்பதியரின் இரண்டு வயது மகள் பாத்திமா தில்ஷா, ஓடையில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டார். இதைக்கண்ட அமல்கிருஷ்ணா, துணிச்சலுடன் ஓடையில் குதித்து சிறுமியை மீட்டு, வாயில் சுவாசம் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தார். தக்க நேரத்தில் நீரில் இருந்து மீட்டு, முதலுதவி அளித்து காப்பாற்றினார். இதையடுத்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற சிறுமி, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். துணிச்சலாக செயல்பட்டு சிறுமியை காப்பாற்றிய அமல்கிருஷ்ணாவை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இதுகுறித்து அதுல்கிருஷ்ணா கூறுகையில், ''பள்ளியில் ஜே.ஆர்.சி (ஜூனியர் ரெட் கிராஸ்) அமைப்பு சார்பில், வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி கொடுத்தனர். எனக்கு நீச்சல் தெரியும் என்பதால், சிறுமியை மீட்டு, பயிற்சி பெற்றவாறு முதலுதவி செய்தததால், உயிரை காப்பாற்ற முடிந்தது,'' என்றார்.