மது கேட்ட வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 3 நண்பர்கள் போலீசில் சரண்
சூலுார்:கோவை அருகே மது கேட்டு தகராறு செய்த வாலிபரை, பாட்டிலால் குத்தி, கொலை செய்து புதைத்த மூவர், சூலுார் போலீசில் சரணடைந்தனர். மதுரையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 28. கோவை மாவட்டம், காங்கயம்பாளையத்தில் தங்கி, தனியார் நிறுவன வேலைக்கு சென்று வந்தார். இவருடன், மதுரையை சேர்ந்த ரகுபதி, 24, சூலுாரை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 24 கரண், 23, மூவரும் வேலை செய்து வந்தனர். நால்வரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, மூவரும் மது வாங்கி கொண்டு, மது குடிக்க, காங்கயம்பாளையம் அய்யப்பன் கோவில் அருகே தடுப்பணைக்கு சென்றனர். அப்போது, அவர்களை கண்ட சுரேஷ்குமார், தனக்கும் குடிக்க மது வேண்டும், என, கேட்டு தகராறு செய்துள்ளார். தர மறுத்ததால், பாட்டிலை எடுத்து ரகுபதியை குத்த முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து, சுரேஷ்குமாரை பாட்டிலால் குத்தி கொலை செய்தனர். அச்சமடைந்த மூவரும் சடலத்தை அங்கேயே எரிக்க முயன்றுள்ளனர். அதன்பின், குழி தோண்டி, சடலத்தை புதைத்து விட்டு, இரு சக்கர வாகனத்தை, கிணற்றில் வீசி விட்டு, நேற்று மதியம், மூவரும் சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற டி.எஸ்.பி., தங்கராமன், இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர், வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில், சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.