| ADDED : ஜன 18, 2024 11:01 AM
மூணாறு : தொடுபுழா அருகே 13 பசுக்களை இழந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு அரசு சார்பில் 5 பசுக்கள் வழங்கப்பட்டன.இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வெள்ளியாமற்றம் பகுதியில் வசித்த பென்னி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் மனைவி ஷைனி, மகன்கள் ஜார்ஜ், மாத்யூ, மகள் ரோஸ்மேரி ஆகியோர் நிர்க்கதியாகினர். பசு வளர்த்தலை பென்னி தொழிலாக செய்தார். அவர் இறந்த பிறகு பசுக்களை விற்க ஷைனி முன் வந்தபோது அவற்றை விற்றால் வருமானத்திற்கு வழியின்றி போகும் என்பதை உணர்ந்த 10 வயது மாத்யூ பசுக்களை வளர்க்க முன் வந்தார். படிப்பை கைவிடாமல் பசுக்களை பராமரித்து வருவாய் ஈட்டியதால் கேரள அரசு 2021ல் சிறுவர்களுக்கான சிறந்த பால் உற்பத்தியாளர் விருதை மாத்யூவுக்கு வழங்கி கவுரவித்தது. தற்போது 10ம் வகுப்பு படிக்கும் மாத்யூ 20க்கும் மேற்பட்ட பசுக்களை பராமரித்தார். டிச.,31 இரவில் மரவள்ளி கிழங்கின் தோலை தின்று 13 பசுக்கள் இறந்தன.மாத்யூவின் நிலைமை அறிந்து நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் உதவிக்கரம் நீட்டினர். கேரள கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சுராணி மாத்யூவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரசு சார்பில் 5 பசுக்கள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி மூணாறு அருகே மாட்டுபட்டியில் உள்ள அரசு மாட்டு பண்ணையில் இருந்து இன்சூரன்ஸ் செய்யப்பட்ட 5 பசுக்களை மாத்யூவுக்கு அமைச்சர் வழங்கினார். தவிர மில்மா நிறுவனம் சார்பில் ரூ. 45 ஆயிரத்திற்கான காசோலை, கேரள கால்நடை தீவனத்துறை சார்பில் இலவசமாக ஒரு மாதத்திற்கு தீவனம் வழங்கப்பட்டது. இந்திய கால்நடை மருத்துவ சங்கம் சார்பில் பால் கறக்கும் இயந்திரம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.