| ADDED : ஜன 07, 2024 12:22 AM
திருமங்கலம்;மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். அவர்களுக்கு 100 ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து வழங்கப்பட்டது.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா, கறி விருந்து நடக்கும். இதில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. கல்வி, வேலை வாய்ப்பு, குழந்தை வரம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களுக்காக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் கருப்பு நிற ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல், விளைநிலங்களில் உணவு தேடி செல்லும் போது யாரும் விரட்ட மாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.நேற்று, 100 ஆடுகள் பலியிடப்பட்டு 250 மூடை அரிசியில் சாதம் தயாரானது. ஜாதி மத வேறுபாடு இன்றி சமூக நல்லிணத்திற்காக கொண்டாடப்படும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.