உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எருக் கம்பெனி அருகே அமைகிறது ரவுண்டானா! போக்குவரத்து நெருக்கடிக்கு வருகிறது தீர்வு 

எருக் கம்பெனி அருகே அமைகிறது ரவுண்டானா! போக்குவரத்து நெருக்கடிக்கு வருகிறது தீர்வு 

கோவை;எருக் கம்பெனி அருகே, ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டார்.கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்க இருக்கிறது. இடைப்பட்ட பகுதியில், 761 மீட்டர் இடைவெளியே இருக்கிறது. இவ்விரு மேம்பாலத்தையும் இணைத்தால், கவுண்டம்பாளையம் சாலை - சங்கனுார் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கலாம் என, கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் (அ.தி.மு.க.,) சட்டசபையில் பேசியிருந்தார்.இதுதொடர்பாக, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டுவதற்கு, டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டது; ஒப்பந்தம் செய்து விட்டால், பணி உடனே துவக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.இரு மேம்பாலங்களையும் இணைக்க வேண்டுமெனில், இரு பாலத்தையும் கட்டுமானங்களையும் இடித்து, இணைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்; தேவையற்ற சிரமம் ஏற்படும். அதனால், எருக்கம்பெனிக்கு அருகே மேம்பாலங்களுக்கு இணையாக, சாலையையும், சங்கனுார் பள்ளத்தின் குறுக்கே உள்ள பழைய பாலத்தையும் அகலப்படுத்தி, சங்கனுார் ரோடு - கவுண்டம்பாளையம் ரோடு சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்கலாம் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர். இவ்வாறு செய்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கலாம் என கூறியதால், மதிப்பீடு தயாரிக்க, அமைச்சர் அறிவுறுத்தினார்.சங்கனுார் ரோட்டில் ரயில்வே கிராசிங் வருகிறது; அப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டுமென, எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார். அங்கும் மேம்பாலம் கட்டுவதற்கு அளவீடு செய்து, மதிப்பீடு தயார் செய்ய, அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை