| ADDED : பிப் 10, 2024 11:56 PM
கோவை;கோவையில் உழவர் நலத்துறை சார்பில், இந்த ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்து, விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம், காணொலி காட்சி வாயிலாக, வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கோவை, காரமடை, தொண்டாமுத்துார், பொள்ளாச்சி வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். வாழை சூறாவளி காற்றினால் பாதிக்கப்படும் போது, பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பாக்கு பயிரிட மானியம் வழங்கவும், காரமடை வட்டாரத்தில் பெருமளவில் பயிரிடப்படும் கறிவேப்பிலை பயிருக்கு, போதிய விலை இல்லாத போது அரசு கொள்முதல் செய்து அதனை பொடியாக்கி, ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.வன விலங்குகளின் தாக்குதலால் ஏற்படும், பயிர் சேதத்திற்கு இழப்பீடு அதிகரித்து வழங்கவும், தென்னை- கொப்பரைக்கு விலை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை விவசாயிகள் அரசுக்கு முன் வைத்தனர்.இந்த காணொளி காட்சி கூட்டத்தில், வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண் உற்பத்தி கமிஷனர் அபூர்வா மற்றும் வேளாண் துறை இயக்குனர்கள் பங்கேற்றனர்.