| ADDED : ஜன 20, 2024 01:08 AM
கோவை:'மும்பையில் குண்டு வெடிக்கும்' என்று கோவை ஹிந்து அமைப்பு பிரமுகரிடம் மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 40. ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி. இவரது மொபைல் போனுக்கு சில நாட்களுக்கு முன் ஹிந்தியில் பேசியவர், 'தான் அல்- -கொய்தா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், மும்பையில் வெடிகுண்டு வைத்துள்ளேன்' என கூறினார். அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியம், அருகில் இருந்த தனது நண்பர் செந்தில்குமாரிடம் மொபைல் போனை கொடுத்து, அந்த நபரிடம் தெளிவாக ஆங்கிலத்தில் பேசி விபரங்களை கேட்க கூறினார். மீண்டும் அந்த நபர் செந்தில்குமாரிடம் மும்பையில் குண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு மொபைல் போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, சுப்பிரமணியம் மற்றும் அரவது நண்பர் கோவை மாநகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாநகர போலீசார் உடனே மும்பை போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்தனர். இதுகுறித்து கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சுப்பிரமணியம் மற்றும் செந்தில்குமாரை அழைத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து அந்த மர்ம நபர் பேசிய மொபைல் எண்ணை பெற்றனர். அந்த எண் யாருடையது என ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த எண் இணைய தளம் மூலம் வந்த அழைப்பு என தெரிய வந்துள்ளது.