உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடைகளை தகர்க்கும் கற்கை நன்றே! மாநகராட்சி பள்ளிகளில் முதற்கட்டமாக துவக்கம்

தடைகளை தகர்க்கும் கற்கை நன்றே! மாநகராட்சி பள்ளிகளில் முதற்கட்டமாக துவக்கம்

கோவை:மாணவர்களின் மனநலம் பேணவும், உளவியல் ஆலோசனைகள் வழங்கி பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும், 'கற்கை நன்றே' என்ற திட்டம் மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 துவக்கப் பள்ளிகள், 10 உயர்நிலை, 14 நடுநிலை மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.தவிர, 1,400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு காரணமாக மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.அதன்படி, 2023-24ம் கல்வியாண்டில், 3,263 மாணவியர், 2,727 மாணவர்கள் என, 5,990 பேர் மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கை புரிந்துள்ளனர். அதேசமயம், மாணவ, மாணவியர் தங்களது குறைகளை தெரிவிக்கவும், தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், மாணவியரிடம் வாரந்தோறும் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் விதமாக இலவச 'டோல் ப்ரீ' எண் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மாநகராட்சி கமிஷனர், கல்விக் குழுவினரிடம் குறைகள் தெரிவிக்கலாம் என்பதால் மாணவ, மாணவியருக்கு பக்க பலமாக இருக்கும்.அடுத்தகட்டமாக, 'கற்கை நன்றே' என்ற திட்டத்தை முதற்கட்டமாக, ஆர்.எஸ். புரம், கெம்பட்டி காலனி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதனால், சரியான வழிகாட்டுதல் கிடைப்பதுடன், கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதும் தவிர்க்கப்படும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

மூன்று மாதங்கள் பயிற்சி

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக, 27 மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 'கற்கை நன்றே' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு தனிநபர் மற்றும் பொது வழிகாட்டுதல் வாயிலாக மாணவர்கள் மனநலம் பேணப்படும்.'தேர்வு பயம், மனச்சோர்வு, பதட்டம், இளமை கால பிரச்னை, போதை பழக்க வழக்கம் ஆகியவற்றை தவிர்க்கும் வகையில், உளவியல் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என தலா, 30 பேர் மூன்று மாத காலம் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்குவர். யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ