| ADDED : மார் 15, 2024 01:58 AM
கோவை;குழந்தைகள் கடத்தல் சம்பவம் வதந்தி என எஸ்.பி., பத்ரிநாராயணன் விளக்கம் அளித்தார்.கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., பத்ரிநாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை கடத்துவதற்காக நுழைந்துள்ளதாக வாட்ஸ் ஆப் வாயிலாக குரல் பதிவு பரவி வருகிறது. கோவை மாவட்ட போலீசார் இதனை, 100 சதவீதம் வதந்தி என கூற முடியும். பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம். வடமாநிலத்தில் இருந்து கோவைக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் வந்து பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் இது வடமாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே மனஸ்தாபத்தை உருவாக்கும் விதத்தில் பரப்பப்படுகிறது. மேலும் கடத்தல் தொடர்பாக எந்த விதமான தகவலும் இதுவரை போலீசாருக்கு வரவில்லை.இந்த தகவலை சமூக வலைதளங்களில் யார் பதிவிட்டார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த, 7 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை. கோவை கண்ணம்பாளையம் மற்றும் வீரப்பாண்டி பகுதியில் குழந்தை கடத்தல் நடைபெற்றதாகவும், அவர்களை பொதுமக்கள் தாக்கியதாகவும் வீடியோ பரவுகிறது. அது வேறு ஏதோ ஒரு பகுதியில், வேறு ஏதோ ஒரு சம்பவத்திற்காக நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் இரண்டு பேர் பிடிபட்டதாகவும், மேட்டுப்பாளையத்தில், 18 பேர் வந்திருப்பதாகவும் குரல் பதிவுகள் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டு வருவது முற்றிலும் தவறானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மிக்ஸி விற்க வந்தவர்களை தவறுதலாக பிடித்த மக்கள்
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணிடம் கடந்த, 8ம் தேதி ஆட்டோவில் மிக்ஸி வியாபாரம் செய்து வந்த வடமாநில நபர் மிக்ஸி வேண்டுமா என ஹிந்தியில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் வேண்டாம் எனக் கூறியுள்ளார். அவருக்கு தமிழ் மொழி புரியாமல் அவர் வீட்டு படிக்கட்டில் ஏறியுள்ளார். உடனே அந்த பெண் தனது குழந்தையை கடத்த வருவதாக எண்ணி கட்டையை எடுத்துக்கொண்டு அடிக்க துரத்தி உள்ளார். மேலும் அவருடன் அருகில் வசிக்கும் நபர்களும் துரத்தி உள்ளார். உடனே பயந்து போன அந்த நபர் அவர் வந்த ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார். அவருடன் வந்த மற்றொரு வடமாநில நபர் மட்டும் அங்கு அருகிலேயே உட்கார்ந்து இருந்ததை பொதுமக்கள் பார்த்து அவரை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், 'இரண்டு வடமாநில நபர்களும் மேட்டுப்பாளையத்தில் இருந்து வாடகைக்கு ஆட்டோ எடுத்து வந்ததும், குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக எவ்வித முகாந்திரமும் இல்லாததும்' தெரிந்தது.