| ADDED : ஜூலை 25, 2011 01:54 AM
அன்னூர் : 'தொழிலாளர் நல வாரிய பயன்கள் பல மாதங்களாக வழங்கப்படவில்லை' என, சி.ஐ.டி.யூ., புகார் தெரிவித்துள்ளது.சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யூ.,) ஒன்றிய மாநாடு, அன்னூரில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். மாநில பொதுச்செயலர் மூர்த்தி பேசுகையில்,''சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம், வேலை நேரம், போனஸ் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வமான உரிமைகள் எதுவும் இல்லை. மத்திய அரசு பொய்யான புள்ளி விபரங்களை அளித்து டீசல், மண்ணெண்ணை மற்றும் சமையல் காஸ் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. சாமானிய மக்கள் இந்த விலையுயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கவேண்டிய பணப்பயன்கள் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. வாரியங்கள் சரியாக செயல்படாமல் முடங்கியுள்ளன. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் திண்டாடி வருகின்றன,'' என்றார். கூட்டத்தில், கோவையில் நடைபெறும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில மாநாட்டில் அன்னூர் வட்டாரத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செல்வகுமார், துணை செயலாளர் சுப்ரமணியம் உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.