| ADDED : ஜூலை 31, 2011 03:09 AM
கோவை : பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று நடந்த மாவட்ட அளவிலான
வாலிபால் போட்டியில் சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
பெண்கள் பிரிவில் திருப்பூர் வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி மாணவிகள்
வெற்றி பெற்றனர்.பி.பி.ஜி., கல்லூரி சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான
மூன்றாம் ஆண்டு வாலிபால் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடந்தன. ஆண்கள்
பிரிவில் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, உக்கடம் இஸ்லாமிக் மெட்ரிக்
பள்ளி அணிகளும், பெண்கள் பிரிவில் திருப்பூர் வித்ய விகாசினி, பீளமேடு
ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளி அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.முதல்
இறுதிப் போட்டியில் வித்ய விகாசினி, ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளி மாணவிகள்
களம் கண்டனர். ஆட்டத்தின் முதல் செட்டிலேயே வித்ய விகாசினியின் கை
ஓங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வித்ய விகாசினி மாணவிகள்
இரண்டு செட்டையும் 25-7, 25-15 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி, வெற்றி
பெற்றனர்.விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் சி.எஸ்.ஐ., பள்ளி முதல் செட்டை
25-23 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் சுதாரித்து
ஆடிய இஸ்லாமிக் பள்ளி அணி 25-22 புள்ளி கணிக்கில் வென்றது. இறுதியில்
சி.எஸ்.ஐ., பள்ளி 25-23 புள்ளி கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றி
சாம்பியன் பட்டம் வென்றது.மாலை நடந்த பரிசளிப்பு விழாவில், கோவை மண்டல வன
பாதுகாவலர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை களை வழங்கினார்.