பொங்கலூர் : பொங்கலூரில் நடந்த அரசு விழாவில் 508 பயனாளிகளுக்கு 72 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பொங்கலூர் பி.வி.கே.என்., மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். தனி துணை கலெக்டர் சரஸ்வதி வரவேற்றார். 57 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, 18 நபர்களுக்கு விதவை உதவித்தொகை, ஒருவருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆறு நபர்களுக்கு கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஐந்து நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இரண்டு நபர்களுக்கு முதிர் கன்னி உதவித்தொகை, 51 நபர்களுக்கு ஆதரவற்ற விவசாய கூலி உதவித்தொகை, 37 நபர்களுக்கு விதவை உதவித்தொகை வழங்கப்பட்டது. 49 நபர்களுக்கு குடும்ப அட்டை, 57 நபர்களுக்கு பட்டா மாறுதல், ஏழு நபர்களுக்கு உட்பிரிவு ஆவணங்கள், ஐந்து நபர்களுக்கு வாரிசு சான்று, 25 நபர்களுக்கு ஆதிதிராவிடர் நல அலுவலக வீட்டுமனை பட்டா, 26 நபர்களுக்கு வேளாண் இடுபொருட்கள், 22 நபர்களுக்கு மூன்று சக்கர வாகனம், தோட்டக் கலைத்துறை சார்பில் ஆறு நபர்களுக்கும், இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் 134 நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஊரக தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு பேசுகையில், ''விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை வந்துள்ளது. நலத்திட்ட உதவி வழங்குவதால், பல குடும்பங்கள் வறுமையில் இருந்து நீங்கி, சமுதாயம் முன்னேறும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் இல்லாத மாநிலமாக வளரும். இப்பகுதியில் இதுவரை புதிதாக 23 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன,'' என்றார். பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், பொங்கலூர் லயன்ஸ் கிளப் தலைவர் நாகராஜூ, உகாயனூர் ஊராட்சி தலைவர் பழனிசாமி, பொங்கலூர் ஊராட்சி தலைவர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.