உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுக்காக பணம், பொருள் கொடுப்போர், வாங்குவோர் மீது கிரிமினல் நடவடிக்கை :கலெக்டர் கடும் எச்சரிக்கை

ஓட்டுக்காக பணம், பொருள் கொடுப்போர், வாங்குவோர் மீது கிரிமினல் நடவடிக்கை :கலெக்டர் கடும் எச்சரிக்கை

அன்னூர் : 'ஓட்டுக்காக பணம் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கோவை கலெக்டர் கருணாகரன் எச்சரித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கியது. போட்டியிட திட்டமிட்டுள்ள சுயேச்சைகளும், அரசியல் கட்சி பிரமுகர்களும், அன்னூர் ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை புறக்கணித்துவிட்டு, இலவச பொருட்களை அள்ளி வழங்குகின்றனர். வடவள்ளியில் தற்போதைய தலைவர் ரங்கசாமிக்கும், இரண்டு முறை தோற்ற கணேசனுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு பல இடங்களில் 'குவாட்டர்' பாட்டில்கள் சரமாரியாக வழங்கப்படுகின்றன. குப்பேபாளையத்தில் மக்கள் பொது நலமன்றம் சார்பில், இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. ஒட்டர்பாளையம், பூலுவபாளையம் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு அணி சார்பில், 'குவாட்டர்' பாட்டில் வினியோகம் செய்யப்படுகிறது. காரேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் பல இடங்களில் வேட்பாளர் ஓட்டுக் கேட்டுவிட்டு சென்ற சில நிமிடங்களில் 'குவாட்டர்' பாட்டில் வழங்கப்படுகிறது. தேர்தல் அலுவலர் கூறுகையில்,''நடத்தை விதி மீறல் குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இது குறித்து அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. ஓட்டுக்காக இலவச பொருள் வழங்குவது குறித்து தகவல் தெரிந்தால், போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கலாம்,'' என்றார். தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை கலெக்டருமான கருணாகரன் கூறியதாவது: வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ கொடுப்பது தேர்தல் விதிமுறைப்படி கிரிமினல் குற்றம். கொடுப்போர் மற்றும் வாங்குவோர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ