மேட்டுப்பாளையம் : ''சேலை மற்றும் வேட்டியில் தீ பிடித்துக் கொண்டால், ஓடாமல், தரையில் படுத்து உருண்டால், தீ அணைந்து விடும்,'' என, மேட்டுப்பாளையம் தீயணைப்பு அலுவலர், ஆறுமுகம் தெரிவித்தார்.தீயணைப்பு துறை சார்பில், ஏப். 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை, தீயணைப்பு சேவை வாரம் அனுசரிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர், தீ தடுப்பு பற்றி, பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நிகழ்ச்சிகளை நடத்தினர்.தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்து பேசியதாவது: கூரை வீடுகளின் மேல், மின் கம்பி அமைக்காதீர். வீடுகளுக்கு அருகே தட்டு, வைக்கோல் போர் அமைக்க வேண்டாம். வாகனங்களை ஓட்டும் போதோ, பெட்ரோல் பங்க் அருகிலோ, செல்போன் பேச வேண்டாம்.
குழந்தைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்றுக் கொடுங்கள். மூடியற்ற சிம்னி விளக்கை பயன்படுத்தாதீர்கள். சமையல் செய்து முடித்தவுடன் காஸ் அடுப்பின் ரெகுலேட்டரை மூடி விடுங்கள்.உடுத்தியுள்ள சேலை மற்றும் வேட்டி ஆகிய ஆடைகளில் தீ பிடித்துக் கொண்டால், ஓடாமல் தரையில் படுத்து உருண்டால், தீயணைந்து விடும். தீப்புண்ணான இடத்தில், உடனடியாக குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள், ஆழமான நீர்நிலைகளுக்கு அருகே செல்லாதீர்கள். உயரமான கட்டடம், மரங்களில் ஏற வேண்டாம். கூர்மையான பொருட்களை வைத்துக் கொண்டு விளையாடாதீர்கள்.பஞ்சாலைகளில் உள்ள இயந்திரங்களில் தேங்கி இருக்கும், கழிவு பஞ்சுகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மின்சார உபகரணங்களை சரியாக பராமரிக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். தீயணைப்பு பற்றிய அடிப்படை பயிற்சிகளை, மில் காவலர்களுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு, அலுவலர் பேசினார். பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் சங்கரன், சசிக்குமார், வேலுமணி, அந்தோணிராஜ், திவாகர், ஞானராஜ் ஆகியோர் விபத்துகளை எவ்வாறு தடுக்க வேண்டும், தீ விபத்திலிருந்து எவ்வாறு, பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய நோட்டீஸ்களை வழங்கினர்.