உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கிலிரோடுக்கு இயங்கும் பஸ்சை சோலையாறு வரை நீட்டிக்காதீங்க!

சங்கிலிரோடுக்கு இயங்கும் பஸ்சை சோலையாறு வரை நீட்டிக்காதீங்க!

வால்பாறை; சங்கிலி ரோடு செல்லும் பஸ்சை சோலையாறுடேம் வரை நீட்டிக்க கூடாது என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை அடுத்துள்ள பன்னிமேடு செல்லும் வழியில் உள்ளது சங்கிலிரோடு. வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வால்பாறை அரசு போக்கு வரத்துக்கழகத்தின் சார்பில் சங்கிலிரோட்டிற்கு பஸ் இயக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களும் பயனடைகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்லிரோடு செல்லும் பஸ் சோலையாறுடேம் வரை சென்று வருவதால், மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கின்றனர். சங்கிலிரோடு மக்கள் கூறுகையில், 'கடந்த, 10 ஆண்டுகளாக வால்பாறை சங்கிலிரோடு பகுதிக்கு பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களாக முன் அறிவிப்பு இன்றி, சங்கலிரோட்டிற்கு இயக்கப்படும் பஸ், சோலையாறுடேம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பஸ்சில் கூட்ட நெரிசலில் சிக்கி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உருளிக்கல், தோணிமுடி வழித்தட பஸ்கள் சோலையாறுடேம் வரை சென்று வருகின்றன. அதனால், சங்கிலிரோடு வரும் பஸ்சை சோலையாறுடேம் வரை நீட்டிக்க வேண்டாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !