உடுமலை : தமிழரின் பாரம்பரிய விழாவாக, தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் திருநாளிற்கு, 10 நாட்களே உள்ள நிலையில், பொங்கலுக்கு மண் பானைகள், மண் அடுப்பு, தட்டு ஆகியவை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.உடுமலை, மருள்பட்டி, பள்ளபாளையம், புக்குளம், பூளவாடி, எஸ்.வி.,புரம் உள்ளிட்ட பகுதிகளில், மண்பாண்ட தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். மண்பாண்டம் தயாரிப்புக்கு என உள்ள குளங்களிலிருந்து, மண் எடுக்கப்படுகிறது. செம்மண் மற்றும் களிமண், மணல் ஆகியவற்றை, வடிகட்டி, சேறு போல் தயாரித்து, சக்கரத்தில் வைத்து, மண் பானை தயாரிக்கப்படுகிறது.பின்னர், உலர வைத்து, நெளிவுகள் மரக்கட்டையால் மெதுவாக தட்டி சரி செய்யப்படுகிறது. அதற்கு பிறகு, சூளையில் இட்டு, வேக வைத்து விற்பனைக்கு தயாராகிறது.அரை கிலோ முதல், 2 கிலோ வரை, பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் மண் பானை தயாரிக்கப்படுகிறது. புதிய மண் பானையோடு, தட்டு, அடுப்பு என பொங்கல் வைப்பதற்கு தேவையான மண் பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.அரை கிலோ கொள்ளளவு கொண்ட மண் பானை, ரூ.70; ஒரு கிலோ, ரூ.100; இரண்டு கிலோ, 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சிறிய மண் அடுப்பு, 100 ரூபாய்க்கும், பெரியது, 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.தொழில் நுட்ப வளர்ச்சியால், மண் பானை பயன்பாடு குறைந்தாலும், இன்றளவும் பாரம்பரிய முறையில், மண்பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது.மண்பானை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:ஒவ்வொரு விவசாயிகளும், ஏழு பொங்கல், 11 என, பொங்கல் என வைத்து வந்தனர். அதற்காக, பொங்கல் பானைகள் வாங்குவர்.கிராமத்திற்கு, 500 பொங்கல் பானைகள் விற்று வந்தது. தற்போது, உலோக பாத்திரங்கள் வருகை காரணமாக, மண் பானை பயன்பாடு குறைந்தாலும் பாரம்பரியாக, மண் பானையில் பொங்கல் வைப்பது தொடர்ந்து வருகிறது.பானை தயாரிக்க, மண் எடுத்து வருவது முதல் அதனை சூளையில் வேகவைத்து விற்பனைக்கு அனுப்புவது வரை ஒரு மாதம் வரை ஆகிறது.தற்போது, மண் பானைகள் உற்பத்தி செய்யப்பட்டு, சூளையிடும் பணி, இயற்கை வர்ணம் பூசும் பணி என விற்பனைக்கு தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. நடப்பாண்டு, பொங்கலுக்கு ,மண் பானைகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.