| ADDED : ஜன 28, 2024 02:26 AM
தொண்டாமுத்தூர்:கரடிமடையில், சட்டவிரோதமாக அவுட்டுக்காய் தயாரிக்கும்போது வெடித்ததில், ஒருவருக்கு, கை விரல்கள் துண்டானது. மற்றொருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரடிமடை, வன்னியர் வீதியை சேர்ந்தவர் ரங்கன் என்கிற ரங்கசாமி,40; கூலி தொழிலாளி. இவர், நேற்றுமுன்தினம், அதே பகுதியை சேர்ந்த, தனது உறவினரான மாறன்,51 என்பவருடன் சேர்ந்து, வனவிலங்குகளை வேட்டையாட வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, அவுட்டுக்காய் வெடித்ததில், ரங்கசாமியின் இடது கை விரல்கள் துண்டானது. இதனையடுத்து, மாறன், ரங்கசாமியை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.மதுக்கரை வனச்சரக வனக்காப்பாளர் சவுந்தர்யா, பேரூர் போலீசில் புகார் அளித்தார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாறனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ரங்கசாமி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.