உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற எப்படி தயாராக வேண்டும்?  மனநல மருத்துவர் சொல்றதை படிங்க!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற எப்படி தயாராக வேண்டும்?  மனநல மருத்துவர் சொல்றதை படிங்க!

பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், துாங்காமல், முறையாக சாப்பிடாமல், தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கிக்கொள்ளாமல், ரிலாக்ஸாக படிக்கும் வழிமுறைகளை சொல்கிறார், மனநல மருத்துவர் எந்துமதி.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பின்பற்றும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு துவங்கிவிட்டது. மாநில பாடத்திட்டம் படிப்போருக்கு, மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இத்தேர்வின் ரிசல்ட், உயர்கல்வியில் எந்த படிப்பை தேர்வு செய்வது, எந்த கல்லுாரியில் சீட் உறுதி செய்வது உள்ளிட்டவற்றிற்கு அடித்தளம் என்பதால், மாணவர்களை விட பெற்றோர் தான், கூடுதல் பதட்டத்தில் இருக்கின்றனர். ''என்னதான் பெற்றோர் கண்விழித்தாலும், குழந்தைகள் தான் தேர்வெழுத போகிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டும். ரிலாக்ஸாக அவர்கள் படிக்க, வீட்டில் சூழலை அமைத்து தருவதும், சத்தான உணவுகளை சமைத்து தருவதோடு, தன்னம்பிக்கை வார்த்தைகளால் வழிநடத்துவது தான், நல்ல பேரன்டிங் அடையாளம்,'' என்கிறார் மனநல மருத்துவர் எந்துமதி. அவர் கூறியதாவது:

துாக்கம்

மூளைக்கு புத்துணர்வு அளிப்பது துாக்கம் தான். இதன் நேரம், ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நன்கு துாங்கிய பிறகு படிப்பது தான், மூளையில் பதிவாகும். துாக்கமின்மை பதட்டத்தை ஏற்படுத்தி, தேர்வறையில் உரிய பதில் எழுத முடியாமல், குழப்பத்தை உண்டாக்கலாம்.

டயட்

தேர்வு சமயத்தில், துரித உணவுகள், முறையாக சமைக்கப்படாத உணவுகள், ஒவ்வாமை தரும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதை சாப்பிட்டு, தேர்வு நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளக்கூடாது. வீட்டில் சமைத்த காய்கறி, கீரைகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்ப்பதால், உடல் சுறுசுறுப்படையும்.

எனர்ஜி டிரிங்க்

இரவு முழுக்க படிக்கலாம் என நினைத்து, பிளாஸ்க்கில் காபி, டீயை நிரப்பி வைத்துக்கொள்ள கூடாது. இது, துாக்கத்தை கெடுத்து, மன அழுத்தத்தை உருவாக்குவதோடு, உடலுக்கும் நல்லதல்ல. இதற்கு பதிலாக, தண்ணீர், ஜூஸ், இளநீர் போன்ற நீராகாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.

வாக்கிங், யோகா

காலையில் எழுந்ததும், 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி, யோகாவிற்கு செலவிடுவதால், மூளை சுறுசுறுப்படையும். படித்ததும் நினைவுக்கு வரும். தொடர்ந்து, குறிப்பிட்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கும் போது அயர்ச்சி ஏற்படும். 10 நிமிடங்கள் நடப்பது, விளையாடுவது, உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக்கும்.

ரிசல்ட்டை நினைக்காதீங்க

தேர்வுக்கு முன்போ, தேர்வு அறையிலோ, ரிசல்ட் பற்றிய தேவையில்லாத எண்ணங்களை தவிர்க்க வேண்டும். படித்ததை சிறப்பாக எழுதுவதிலும், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறோமா என சரிபார்ப்பதும் தான் அவசியம். கடின வகை வினாத்தாள் வந்தாலும், தேர்வறையில் தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்தாலே, உரிய பதில்கள் நினைவுக்கு வந்துவிடும்.

பெற்றோரே...இது உங்களுக்கு!

பெற்றோரே, பிற குழந்தைகளுடன் ஒப்பிடாமல், உங்கள் குழந்தையை உற்சாகப்படுத்த வேண்டும். கடின வகை வினாத்தாள் வந்தாலும், அடுத்த தேர்வுக்கு தயாராக, நம்பிக்கை கொடுக்க வேண்டும். தோல்வியே அடைந்தாலும் பல வாய்ப்புகள் இருப்பதை மறந்துவிடக்கூடாது. உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை, துாவ ஆரம்பித்து விட்டால் போதும்.

இப்படியும் படிக்கலாம்!

ஒவ்வொருவருக்கும் படிக்கும் முறை மாறுபடும். உங்களின் நடைமுறையை மாற்ற வேண்டாம். ஆனால், தொடர்ந்து கடினபாடங்களை நீண்ட நேரம் படித்தால், அவை மூளையில் பதிவாகாமல் இருக்கலாம். ஒரு எளிய பாடம், கடின வகை பாடம் என மாற்றி கொண்டே இருந்தால், படிக்க வேண்டிய பாடங்களை, விரைவில் படித்து விடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை