| ADDED : பிப் 08, 2024 02:05 AM
கோவை,:கோவை அரசு மருத்துவமனையில், ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்று பணிகளை ஆய்வு செய்தார். இரண்டாம் தளத்தில் பணிகள் பாதியில் இருந்தன. அவர் சென்ற பகுதியில் மின் இணைப்பு இல்லாததால், உடன் வந்தவர்கள், மொபைல் போனில் இருந்த டார்ச் லைட்டை ஒளிரவிட்டு, வெளிச்சத்தை ஏற்படுத்தினர்.இதனால் அதிருப்தி அடைந்த அவர், பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்தார். அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், ''என்ன வேலை செய்கிறீர்கள்... இது தான் நீங்கள் பார்க்கும் வேலையா? ''நான் ஆய்வுக்கு வருவேன் என்பது தெரியாதா... தெரிந்தும், மின் இணைப்பு கூட கொடுக்கவில்லை. எப்படி துவக்க விழா நடத்துவது?'' என்றார்.தொடர்ந்து, ஒவ்வொரு தளமாக ஆய்வு செய்த அவர், பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதாகக் கூறி, தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் உணவை உட்கொண்ட செயலர், அருமையாக இருப்பதாக பாராட்டினார். மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.