உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதுகாப்பில் அரைகுறை!: விதிமுறை மீறிய வேகத்தடை விபத்துக்கு விரிக்கிறது கடை

பாதுகாப்பில் அரைகுறை!: விதிமுறை மீறிய வேகத்தடை விபத்துக்கு விரிக்கிறது கடை

விபத்துக்களைத் தடுப்பதற்காக, கோவை நகரின் பல்வேறு ரோடுகளிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில், நிறைய விதிமீறல்கள் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.தேசிய அளவில், விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது; உயிரிழப்புகளில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 1040 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இதில் கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும், 293 பேர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் குறைப்பதற்கு, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போலீசாருடன், மாநில நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் இணைந்து, பல விதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்; ஓரளவு பலனும் கிடைத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, நகரிலுள்ள முக்கிய ரோடுகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில், மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து அமைச்சகம் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடை அமைக்கக்கூடாது என்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில், வேகத்தடைக்குப் பதிலாக, 'ரம்பிள் ஸ்டிரிப்'களை மட்டுமே அமைக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, கோவை நகரில் திருச்சி ரோடு மேம்பாலத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது. சர்ச்சை எழுந்ததும், அவை அகற்றப்பட்டு, 'ரம்பிள் ஸ்டிரிப்' பொருத்தப்பட்டது.அதேபோல, பொள்ளாச்சி ரோட்டில் குறிச்சி குளத்தை ஒட்டியும், இந்த விதிகளை மீறி, வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்காலிகமாக அமைத்துள்ளதாகவும், விரைவில் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் அகற்றப்படவில்லை.

புதிய வேகத்தடைகள்

இப்போது, தேசிய நெடுஞ்சாலையான நஞ்சப்பா ரோட்டிலும், இந்த விதிமீறல் நடந்துள்ளது. பார்க் கேட் அருகில் பாலம் ஏறும் பகுதியிலும், மறுபுறத்தில் பாலத்திலிருந்து இறங்கும் பகுதியிலும் வேகத்தடைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள், ஐ.ஆர்.சி., விதிப்படி சரியான அளவீட்டின்படி அமைக்கப்பட்டிருந்தாலும் வாகனங்களை தடுமாறவே வைக்கின்றன. அதிலும், பாலத்திலிருந்து இறங்கும் பகுதியிலுள்ள வேகத்தடை, மிகவும் ஆபத்தாகவுள்ளது.தடாகம் ரோடு, மருதமலை ரோடு வேளாண் பல்கலை, தொண்டாமுத்துார் ரோடு என நகரின் பல்வேறு ரோடுகளிலும், மாநில நெடுஞ்சாலைத்துறையினரால் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல இடங்களில் வெள்ளை அடிக்கவில்லை; அறிவிப்புப் பலகையும் இல்லை. இதனால் தடை இருப்பது தெரிவதேஇல்லை.வேகமாக வரும் வாகனங்கள், திடீரென நிறுத்தும்போதும், வேகத்தடையில் ஏறி இறங்கும்போதும் விபத்துக்கள் நடக்கின்றன.அதேபோல, வடவள்ளி-தொண்டாமுத்துார் ரோட்டில், சின்மயா பள்ளி அருகில், ஜனாதிபதி வருகைக்காக அகற்றப்பட்ட, இரண்டு வேகத்தடைகளில் ஒன்று மட்டுமே மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இது, விபத்து வாய்ப்பை அதிகரித்துள்ளது.சிக்னல் இல்லாத அதுபோன்ற சாலை சந்திப்புகளில், இரு புறமும் வேகத்தடை அமைப்பது அவசியம். உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்தால் மட்டும் தான், விபத்துக்களை குறைக்க முடியும்.

வேகத்தடை கணக்கெடுப்பு என்னாச்சு?

----கோவை நகருக்குள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் குறைவான அளவில் தான் வேகத்தடைகள் உள்ளன. அவற்றிலும் சில இடங்களில் மட்டுமே, வேகத்தடைகளில் வெள்ளையடிக்கப்படாமல் உள்ளது. ஆனால் கோவை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 2,700 கி.மீ.,க்கும் அதிகமான துாரமுள்ள ரோடுகளில் ஆயிரக்கணக்கான வேகத்தடைகள், அனுமதியின்றியும், ஆபத்தான முறையிலும் அமைக்கப்பட்டுள்ளன. கவுன்சிலர், கான்ட்ராக்டர் நினைத்தால் எங்கும் வேகத்தடை அமைத்துக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இந்த வேகத்தடைகளுக்கு, அறிவிப்புப் பலகை வைக்க வாய்ப்பில்லை; குறைந்தபட்சம் வெள்ளையாவது அடிக்கலாம். இதனால், தினமும் நகருக்குள் இந்த வேகத்தடைகளில் பல ஆயிரம் பேர் விழுந்து காயமடைகின்றனர். முந்தைய கமிஷனர் பிரதாப் இருந்தபோது, இந்த வேகத்தடைகளைக் கணக்கெடுத்து, அவசியமற்ற இடங்களில் அகற்ற உத்தரவிட்டிருந்தார். அவர் மாறியதும் அந்த கணக்கெடுப்பே கைவிடப்பட்டுள்ளது. இன்ஜினியரான புதிய கமிஷனர், இந்த விபரீத விதிமீறல் வேகத்தடைகளுக்கு நிரந்தரத் தீர்வு கண்டால் நல்லது!-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை