கோவை : 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருவதால் கவனமுடன் இருக்க, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் கோடை வெப்பத்தின் தாக்கம், தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. இந்தாண்டு, பிப்., இறுதி முதல், வெயில் புரட்டி எடுத்து வருகிறது.வெயிலின் தாக்கத்தால் நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், 'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் பரவி வருகிறது. தனியார் மருத்துவமனைகளில், இந்நோய்க்காக பலரும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.கோவை அரசு மருத்துவமனை கண் நோயியல் துறை பேராசிரியர் டாக்டர் சரவணன் கூறியதாவது:'மெட்ராஸ் ஐ' ஏற்பட, அடினோ வைரஸ்தான் காரணம். கண் நோய் வந்தால் குறைந்தது, 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள், சுயமாக சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளாமல், கண் மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெற வேண்டும்.ஒருவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை, மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது. பாதிக்கப்பட்ட கண்களில் மஞ்சள், விளக்கெண்ணெய், தாய்ப்பால் உள்ளிட்டவற்றை ஊற்றக்கூடாது.கண்களை தேய்ப்பதால், கருவிழிகளுக்கும் பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது. ஆகவே உறுத்தல் இருந்தாலும் கசக்கக்கூடாது. பாதிப்பு ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்துவதே சிறந்தது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.
'பார்த்தாலே பரவாது'
டாக்டர் சரவணன் கூறுகையில், ''மெட்ராஸ் -ஐ' பாதித்தவர்களை பிறர் பார்த்தாலே, தங்களுக்கும் நோய் பரவும் என்ற எண்ணம் தவறானது. ஆனால், கிருமி பாதிப்புள்ள கண்ணில் இருந்து, வழியும் நீர் பிறர் கையில் பட்டால், பிறருக்கும் இந்நோய் வரலாம். நோய் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் கைகளை கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.