கோவை : பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, முதலிடம் பிடித்தது.இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக கேரம், செஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போட்டிகள் பி.எஸ்.ஜி., கல்லுாரியில், கடந்த இரு நாட்களாக நடந்தன. இதன் இறகுப்பந்து இறுதிப்போட்டியில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி 2 - 1 என்ற செட் கணக்கில், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது.மூன்றாமிடத்துக்கான போட்டியில், மதுரை ஏ.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி 2 - 1 என்ற செட் கணக்கில், ஈரோடு கே.எஸ்.ஆர்., கல்லுாரி அணியை வென்றது. டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில், தஞ்சாவூர் எஸ்.பி.,டி.சி., அணி 3 - 2 என்ற செட் கணக்கில், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வீழ்த்தியது.மூன்றாமிடத்துக்கான போட்டியில், சென்னை முருகப்பா கல்லுாரி அணி 3 - 2 என்ற செட் கணக்கில் திருநெல்வேலி பி.ஏ.சி.ஆர்., அணியை வீழ்த்தியது. செஸ் போட்டியில், சென்னை முருகப்பா முதலிடம், ஈரோடு கொங்கு இரண்டாமிடம், கோவை பி.எஸ்.ஜி., மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் பரிசுகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் முரளிகிருஷ்ணன் உடனிருந்தார்.