| ADDED : ஜன 28, 2024 08:52 PM
வால்பாறை;பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ் ஸ்டாண்டில் கட்சிக்கூட்டம் நடத்த போலீசார் தடை விதிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரம் மலை பகுதியில் அமைந்துள்ளது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது. இதனால், வால்பாறை நகரில் கட்சி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அண்ணாதிடலில் மட்டுமே போலீசார் அனுமதி வழங்குகின்றனர்.ஆனால், கட்சியினர் தடையை மீறி காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகின்றனர்.தடையை மீறி போராட்டம் நடத்துபவர்களை போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால், வால்பாறை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வால்பாறை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், அண்ணாதிடலில் மட்டுமே கட்சிக்கூட்டம், போராட்டம் நடத்த போலீசார் அனுமதிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.