அடிப்படை வசதி செய்யாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
அன்னூர்,அன்னூர் பேரூராட்சி, நாகமாபுதூர், அரச மர வீதியில், கழிவுநீர் வடிகால் மற்றும் சாலை வசதி இல்லை. ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கொங்கு இளைஞர் பேரவையுடன் இணைந்து, அன்னூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன், துணை தாசில்தார் தெய்வ பாண்டியம்மாள், இன்ஸ்பெக்டர் செல்வன் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். பேரூராட்சி சார்பில், 45 நாட்களுக்குள் பணி துவங்குவதற்கான உத்தரவு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதை அடுத்து பொதுமக்கள் மூன்று மணி நேரமாக நடத்திய காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.