| ADDED : பிப் 29, 2024 06:14 AM
கோவை : பதிவுத்துறை கட்டட கட்டுமான பணியை விரைந்து முடிக்க, ஆவண எழுத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில், பதிவுத்துறைக்குச் சொந்தமான பழமையான கட்டடம் செயல்பட்டு வந்தது. இக்கட்டடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட, பதிவுத்துறை சார்பில், 4 கோடி ரூபாய் ஒதுக்கி, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு செயல்பட்டு வந்த, அலுவலகங்கள் தற்காலிகமாக கோவை சிரியன் சர்ச் ரோட்டிலுள்ள மாநகராட்சி கல்யாண மண்டபத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திர பதிவு அலுவலகம், போக்குவரத்து வசதி இல்லாத பகுதியில் இருப்பதால், பத்திரம் பதிவு செய்வோர், ஆவண எழுத்தர்கள் மற்றும் வக்கீல்கள் அங்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.அதனால் புதிதாக கட்டப்பட்டு வரும், பத்திரப்பதிவு அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, புதிய அலுவலகத்துக்கு பதிவுத்துறையை மாற்ற வேண்டும் என, பத்திரம் பதிவு செய்வோர் மற்றும் ஆவண எழுத்தர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த புதிய கட்டடம் தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இப்போது தரைத்தளம் மற்றும் முதல் தள பணிகள் முடிந்துள்ளன. ''இன்னும் ஆறு மாதங்களில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்து விடும்,'' என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டுமானம்) செல்வராஜ் தெரிவித்தார்.