மினி உயர்கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை
வால்பாறை: வால்பாறை எஸ்டேட்களில், கூடுதலாக மினி உயர்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. தற்போது, 99 உயர்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, 2,940 தெருவிளக்குகள் உள்ளன. இந்நிலையில், பல்வேறு எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் முகாமிடுகின்றன. இரவு நேரங்களில் பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். தொழிலாளர்கள் கூறியதாவது: வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை.இதனால், இரவு நேரத்தில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது கூட தெரியாத நிலையில், உயிருக்கு பயந்து வாழ வேண்டியுள்ளது. எனவே எஸ்டேட் பகுதியில் பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைத்து, கூடுதலாக மினி உயர்கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'நகராட்சியில், 21 வார்டுகளிலும் தலா, 30 தெருவிளக்குகள் வீதம் அமைக்கப்படும். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கூடுதலாக மினி உயர்கோபுர விளக்கு அமைக்கப்படும்' என்றனர்.