கோவை:தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு குழந்தைகளுக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.கோவை, சொக்கம்புதுார், கருப்பண்ணன் வீதியை சேர்ந்தவர் சேகர்,33. இவரது மனைவி சுகன்யா,28. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே 2018, செப்., 22ல் ஏற்பட்ட தகராறில் சுகன்யா கொலை செய்யப்பட்டார். சேகர் கைது செய்யப்பட்டு, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜன., 4ல், சேகருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதால், சிறையில் அடைக்கப்பட்டார்.இதனால் பாதிக்கப்பட்ட, சுகன்யாவின் 14 வயதுடைய மகன் மற்றும் 12 வயது மகளுக்கு இழப்பீடு வழங்க, கோவை சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டதை தொடர்ந்து, நீதிபதி சிவா விசாரணை மேற்கொண்டார். அதன்படி, குழந்தைகள் இருவருக்கும் மொத்தம், 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். இழப்பீடு தொகையில், ஒவ்வொரு குழந்தை பெயரில், தலா ஐந்து லட்சம் ரூபாயை, வங்கியில் டெபாசிட் செய்யவும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, அதில் கிடைக்கும் வட்டியை, அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.