உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பித்தளை பூட்டால் தாக்கி நகை பறித்த பேஸ்புக் ஆசாமிக்கு ஏழாண்டு சிறை

பித்தளை பூட்டால் தாக்கி நகை பறித்த பேஸ்புக் ஆசாமிக்கு ஏழாண்டு சிறை

கோவை;'பேஸ்புக்' வாயிலாக, பெண்ணிடம் நட்பு ஏற்படுத்தி, நகை பறித்த ஆசாமிக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், துடியலுார் அருகேயுள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதாம்பாள்,38. இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி, தோவாளை என்ற பகுதியை சேர்ந்த அய்யப்பன்,38, என்பவருக்கும் 'பேஸ்புக்' வாயிலாக பழக்கம் ஏற்பட்டது.ஜெகதாம்பாள், தனது குடும்ப விவரங்களை அய்யப்பனிடம் பகிர்ந்துள்ளார். அப்போது, தனது மகள் திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதாக, ஜெகதாம்பாள் தெரிவித்துள்ளார்.இதை கேட்ட அய்யப்பன், நண்பர் வாயிலாக, ஐந்து லட்சம் ரூபாய் கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும், மூன்று லட்சம் ரூபாய்க்கு மட்டும் வட்டி கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், 2022 மார்ச் 16ல், நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வந்த அய்யப்பன், ஜெகதம்பாள் வீட்டிற்கு சென்றுள்ளார்.உக்கடத்திலிருந்து நண்பர் பணம் கொண்டு வருகிறார் என்று கூறிய படி, வெகுநேரம் காத்திருந்த அய்யப்பன், வீட்டை நோட்டமிட்டுள்ளார்.ஜெகதாம்பாளுக்கு சந்தேகம் ஏற்படவே, உக்கடத்திற்கு சென்று பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். சுதாரித்துக் கொண்ட அய்யப்பன், அங்கிருந்த பித்தளை பூட்டால், ஜெகதம்பாள் முகத்தில் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த நான்கு சவரன் நகையை பறித்து தப்பினார்.துடியலுார் போலீசார் விசாரித்து, தப்பிச் சென்ற அய்யப்பனை கைது செய்து, கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சிவகுமார், அய்யப்பனுக்கு ஏழாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை