தமிழக கைப்பந்து அணி வீரர்கள் பீஹார் பயணம்
பெ.நா.பாளையம்: தமிழக இளையோருக்கான கைப்பந்து அணி, பீஹாரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில், கலந்து கொள்ள வழி அனுப்பு விழா நடந்தது.கல்லுாரி அளவில் இளையோருக்கான கைப்பந்து போட்டிக்கான தமிழக அணி தேர்வு, கடந்த, 9ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், ஜி.டி.என்., கல்லுாரியில் தமிழக கைப்பந்து கழகம் தலைவர் துரை ரத்தினம் மற்றும் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் நடந்தது.இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 148 கைப்பந்து வீரர்கள் பங்கேற்றனர். இதில், இறுதியாக, 19 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த மூன்று நாட்களாக கோவை கற்பகம் பல்கலை வளாகத்தில் நடந்தது.பயிற்சியாளர் சரவணன், அணி மேலாளர் ராமச்சந்திரன், சுதாகர் ஆகியோர், 3 நாள் பயிற்சி முகாமை நடத்தினர். முகாமை வெற்றிகரமாக முடித்த, 19 தமிழக கைப்பந்து வீரர்கள் இம்மாதம், 26 முதல், 30ம் தேதி வரை பீஹாரில் நடக்கும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்கின்றனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியரும், கோவை மாவட்ட கைப்பந்து கழக செயலாளருமான தனக்குமார், வழி அனுப்பி வைத்தார்.