உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  புதர் சூழ்ந்த தாவரவியல் பூங்கா :சுற்றுலா பயணியர் அதிருப்தி

 புதர் சூழ்ந்த தாவரவியல் பூங்கா :சுற்றுலா பயணியர் அதிருப்தி

வால்பாறை: புதர் சூழ்ந்து காணப்படும் தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர். வால்பாறை வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, நகராட்சி சார்பில், 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த, 2022ம் ஆண்டு செப்., மாதம் திறக்கப்பட்டது. ஆனால் தாவரவியல் பூங்காவில் பூ செடிகள் இல்லாததால், மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு பொருட்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பூங்காவில் போதிய பராமரிப்பு பணி செய்யாததால், பூங்காவின் ஒரு பகுதி புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவில் பாம்புகள் அதிகளவில் உள்ளன. மாலை நேரத்தில் சிறுத்தையும் புதரில் பதுங்கி, சுற்றுலா பயணியரை அச்சுறுத்துகின்றன. இதனால், பூங்காவினுள் செல்ல சுற்றுலா பயணியர் அச்சப்படுகின்றனர். சுற்றுலா பயணியர் கூறுகையில், 'வால்பாறை நகராட்சி சார்பில், சுற்றுலா பயணியரை மகிழ்விக்க பூங்கா அமைக்கபட்டும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளன. கேன்டீன், கழிப்பிடம் இன்று வரை திறக்கப்படவில்லை. பூங்காவை சுற்றியுள்ள புதரை அகற்றி அழகுபடுத்த வேண்டும்,' என்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் தமிழக அரசின் உத்தரவுப்படி சுற்றுலா மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும். குறிப்பாக, பூங்கா, படகுஇல்லம் புதுப்பொழிவுடன் சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக திறக்கப்படும். மேலும் சுற்றுலா பயணியர் வசதிக்காக கார் பார்க்கிங் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவும் நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை