பொள்ளாச்சி: பொள்ளாச்சி உழவர் சந்தையில், கடந்த மாதம், 2.25 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானது. பொள்ளாச்சியில், விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், அவ்வப்போது காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். காய்கறிகள் தரமாகவும், விலை குறைவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர் உழவர் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த மாதம், இரண்டு கோடியே, 25 லட்சத்து, 77 ஆயிரத்து, 805 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது: உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 7 லட்சத்து, 52 ஆயிரத்து, 593 ரூபாய் மதிப்புள்ள, 15,951 கிலோ காய்கறிகள் வந்தன. தினமும், 66 விவசாயிகளும், 3,190 நுகர்வோரும் பயன்பெற்றனர். கடந்த மாதம் மொத்தம், 478.6 மெட்ரிக் டன் காய்கறி வரத்து இருந்தது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, இரண்டு கோடியே, 25 லட்சத்து, 77 ஆயிரத்து, 805 ரூபாயாகும். மொத்தம், 2,002 விவசாயிகள், 95,711 நுகர்வோர் பயன்பெற்றுள்ளனர்,' என்றனர்.