கோவை : கோவை லோக்சபா தொகுதியில், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் எவை; மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் எவை என, மாநகர மற்றும் மாவட்ட போலீசாருடன் வருவாய்த்துறையினர் இணைந்து, கள ஆய்வு செய்து அடையாளம் காண்கின்றனர்.கோவை லோக்சபா தொகுதியில், கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம், சூலுார், பல்லடம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் அடங்கும். 2019ல் நடந்த தேர்தலில், 19.58 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். 2,045 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன.கடந்த அக்., மாதம் வெளியிட்ட வரைவு பட்டியல் அடிப்படையில், 18.31 லட்சம் வாக்காளர்களே இருக்கின்றனர். இரட்டை பதிவு மற்றும் இறந்தவர்களை நீக்கி விட்டு, புதியவர்களை சேர்க்கும்போது, வாக்காளர்கள் எண்ணிக்கை மாறுபடும். 100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க, தேர்தல் பிரிவினர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.சில இடங்களில் அதிக வாக்காளர்கள் இருந்ததால், ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதனால், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை மாறுபட வாய்ப்பிருக்கிறது.பதற்றமான ஓட்டுச்சாவடி, மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடி எனவும் வகைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்தந்த தாலுகாவை சேர்ந்த வருவாய்த்துறையினர், போலீசாருடன் இணைந்து ஓட்டுச்சாவடிகளை கள ஆய்வு செய்து, வகைப்படுத்தி, தேர்தல் பிரிவினருக்கு அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் பிரிவில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி, கோவை மாநகர போலீசாரும், மாவட்ட போலீசாரும், அந்தந்த தாலுகாக்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து, ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:தேர்தல் பணிக்கு தேவையான ஊழியர்கள் பட்டியல் தயார் செய்வதற்கு, அவர்களை பற்றிய விபரங்கள், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. போலீசாருடன் இணைந்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிப்பர். அவை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பதற்றமான ஓட்டுச்சாவடிகளாக அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு, கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு ஏற்ப, ஓட்டுச்சாவடிகளின் தன்மை மாறுபடுவதற்கும் வாய்ப்பு உண்டு.இவ்வாறு, அவர்கள் கூறினர்.