உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்னாச்சு சமூகத் தணிக்கை... முறைகேடுகளை கண்டறிய முடியாத அவலம்

என்னாச்சு சமூகத் தணிக்கை... முறைகேடுகளை கண்டறிய முடியாத அவலம்

அன்னுார்:கோவை மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்ட சமூக தணிக்கை, 21 மாதங்களாக நடைபெறவில்லை; இதனால் முறைகேடுகள் கண்டறிவது தடைபட்டுள்ளது.மத்திய அரசு நிதியில், 100 நாள் வேலைத்திட்டம் என்றழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 2006ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பதிவு செய்த குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை, தினசரி சம்பளமாக 294 ரூபாய் வழங்கப்படுகிறது.குளம், குட்டை துார் வாருதல், மரக்கன்றுகள் நடுதல், சாலை அமைத்தல், கழிப்பறை கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 ஊராட்சிகளிலும், தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுவரை இல்லை

அன்னுார் ஒன்றியத்தில், ஒவ்வொரு ஆண்டும் 12 கோடி ரூபாய்க்கு, இத்திட்டத்தில் பணிகள் நடக்கின்றன. ஆனால், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்காமல் இயந்திரங்களை கொண்டு பணி செய்யப்படுவதாகவும், முறைகேடு நடப்பதாகவும், ஊரக வளர்ச்சி துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறை, சமூக தணிக்கையை கட்டாயமாக்கியது. இதன்படி, ஒரு நிதியாண்டில் செய்யப்பட்ட பணிகள், அடுத்த நிதியாண்டு இறுதிக்குள், சமூக தணிக்கை செய்யப்பட வேண்டும். சமூக தணிக்கை செய்யும் நபர்கள், ஊராட்சி நிர்வாகத்தின் உறவினர்களாக இருக்கக் கூடாது என தெரிவித்தது.கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2022 ஏப். 1ம் தேதி முதல் கடந்த மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட 25 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள், இதுவரை சமூக தணிக்கை செய்யப்படவில்லை. இதனால், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பின் மிகத் தாமதமாக சமூக தணிக்கை செய்யப்படும்போது, அதை கண்டறிய முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

ஆறு மாதங்களில்...

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:திட்டத்தில், குளம், குட்டைகள் துார்வாருதல், மரக்கன்றுகள் நடவுப் பணி மேற்கொள்ளப்படுகின்றன. சுகாதார வளாகம் அமைக்கப்படுகிறது. தனியார் தோட்டங்களில் வட்டப் பாத்தி மற்றும் வரப்பு அமைக்கப்படுகிறது. இப்பணிகளை, பணி முடித்த ஆறு மாதங்களில் ஆய்வு செய்தால் மட்டுமே, குறிப்பிட்ட அளவுக்கு பணி செய்துள்ளார்களா என கண்டறிய முடியும். பணி செய்யாமலேயே நிதி செலவிடப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ள முடியும்.2022 ஏப்ரலில் செய்யப்பட்ட பணி, தற்போது சமூக தணிக்கை செய்தால் அளவுகள் மாறிவிடும். அப்பணியில் உருவாக்கப்பட்ட சொத்துக்கள், அதே அளவில் இருக்காது. எனவே புகார் கூறும் போது ஊராட்சி நிர்வாகம், மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் அந்த சொத்து அளவு மாறிவிட்டது என்று காரணம் கூறி தப்பித்துக் கொள்கிறது.

நடவடிக்கை அவசியம்

கிராம சபை கூட்டத்தில், சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிதி இழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக எதுவும் நடைபெறவில்லை.2021 முதல் 22ம் ஆண்டு வரை நடைபெற்ற பணிகள் மட்டுமே, 2022ல் சமூக தணிக்கை செய்யப்பட்டது. அதன் பிறகு நடந்த பணி எதுவும் தணிக்கை செய்யப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக சமூக தணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். சமூக தணிக்கையில் முறைகேடு கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை