| ADDED : ஆக 08, 2024 12:54 AM
கச்சிராயபாளையம் : கள்ளக்குறிச்சி அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் புகுந்து துாங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி மற்றும் தங்க செயினை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் அண்ணாதுரை,51; இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் பின் பகுதியில் துாங்கியுள்ளார். அப்போது வீட்டின் முன் பகுதி வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து மூன்றரை சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை திருடினர்.பின்னர் இரவு 1:00 மணி அளவில், அதே பகுதியை சேர்ந்த சண்முகம்,50; வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர், கைக்குழந்தையுடன் துாங்கிக் கொண்டிருந்த சண்முகம் மகள் சுருதி,25; கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலிச்செயின் மற்றும் இரண்டரை சவரன் தங்க செயினை பறித்தனர். உடன் சுருதி கண் விழித்து கூச்சலிட்டதும், மர்ம நபர்கள் மூவரும் பின்புறமாக உள்ள வயல்வெளி வழியாக தப்பி சென்றனர்.தகவலறிந்து டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தடயவியல் நிபுணர் குழுவினர் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் ராக்கி, அண்ணாதுரை வீட்டில் துவங்கி சண்முகம் வீட்டிற்குள் நுழைந்து பின்பக்கமாக வயல் வழியாக ஓடி மாரியம்மன் கோவில் அருகில் நின்றது.இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.