உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழைய கொள்ளிடத்தில் கரையேறிய மெகா சைஸ் முதலை பிடிபட்டது சிதம்பரம் அருகே மக்கள் அச்சம்

பழைய கொள்ளிடத்தில் கரையேறிய மெகா சைஸ் முதலை பிடிபட்டது சிதம்பரம் அருகே மக்கள் அச்சம்

சிதம்பரம் : சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில், பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் கரையேறிய மெகா சைஸ் முதலையை, பொதுமக்கள் உதவியுடன், வனத்துறையினர் பிடித்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் கொள்ளிடக்கரை கிராமங்களில், முதலை அச்சத்தால் மக்கள் ஆண்டாண்டு காலமாக தவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சிதம்பரம் அடுத்துள்ள பழயை கொள்ளிடம் ஆற்றில், காட்டுக்கூடலுார் கிராமத்தையொட்டி, பொதுமக்கள் பாதுகாப்பாக குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூண்டில், மெகா சைஸ் முதலை இறங்குவதை பார்த்த வாலிபர் ஒருவர் கூச்சலிட்டதால், கிராம மக்கள் அங்கு திரண்டனர்.தகவலறிந்த சிதம்பரம் வனச்சரகர் வசந்த் பாஸ்கர் உத்தரவின் பேரில், வனவர் பன்னீர்செல்வம் தலைமையில், வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் மற்றும் முதலை பிடி குழுவினர் விரைந்து சென்று கிராம மக்கள் உதவியுடன் காலை 9:30 மணி முதல் 11:30 வரை போராடி முதலையை பிடித்தனர்.சுமார் 12 அடி நீளம், 400 கிலோ எடை இருந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று கீழணை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.

3ம் முறையாகபிடிபட்ட முதலை

முதலை பிடி குழுவினர் நேற்று சுமார் 400 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் முதலையை பிடித்தனர். இதே முதலையை, அவர்கள், இதற்கு முன்பு, இருமுறை பிடித்துள்ளாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

எச்சரித்த 'தினமலர்'

வக்காரமாரி குளத்தில் இருந்து முதலைகள் தப்பி வெளியேறியதாக 'தினமலர்' நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியிடப்பட்டது. அந்த முதலைகள் அருகில் உள்ள பழைய கொள்ளிடம் மற்றும் கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் ல் தஞ்சமடைந்திருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் அதுமுதல் எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர். அதற்கேற்ப, கடந்த ஒருவாரத்தில் 4 முதலை கள் பிடிபட்டுள்ளது. எனவே, வரும் மழை காலங்களில் தொடர்ந்து முதலைகள் கரையேறும் என்பதால் பொதுமக்கள் நீர் நிலைகளில் இறங்கும்போது, கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ