| ADDED : மே 10, 2024 01:18 AM
கடலுார்: கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுவில் சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய நீதிமன்றங்களில் இயங்கும் வட்ட சட்டப் பணிகள் குழுவிலும் சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில், ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள், மூத்த குடிமக்கள், எம்.எஸ்.டபுள்யூ., பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலரும் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம், தொகுப்பூதியம், தினக்கூலி கிடையாது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட நீதிமன்றத்தின் https://districts.ecourts.gov.in/cudddalore என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ வரும் 20ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு வரும் 24ம் தேதி காலை 10:30 மணிக்கு அந்தந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும். விண்ணப்பத்தில் இணைத்துள்ள ஆவணங்களின் அசல் ஆவணங்களுடன் காலை 9:30 மணிக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.