திட்டக்குடி நகராட்சி சேர்மனாக தி.மு.க., வை சேர்ந்த வெண்ணிலா கோதண்டம், துணை சேர்மனாக தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு உள்ளனர். இங்கு, தி.மு.க., மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் 19பேரும், அ.தி.மு.க., வினர் 5 பேர் என, மொத்தம் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். 19 கவுன்சிலர்கள் ஆதரவுடன் தி.மு.க, வை சேர்ந்த வெண்ணிலா கோதண்டம் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில், வார்டுகளில் முறையாக திட்டங்கள் நிறைவேற்றவில்லை, பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என, கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். மூன்று முறை போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கணேசன் தலையிட்டு, சமாதானப்படுத்தினார்.இருந்தும் சேர்மன் மீது கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருந்துவந்தனர். கடந்த 7 மாதங்களாக நகராட்சி கூட்டம் கூட நடத்தப்படாததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள், சேர்மனுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி துாக்கினர். நேற்று காலை 11:00 மணியளவில் திட்டக்குடி நகராட்சி அலுவலகத்திதல், தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 16 பேர், சேர்மனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தினர்.கூட்டத்திற்கு பிறகு, மாலை 4:00 மணியளவில், சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து 15 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட மனுவை, நகராட்சி பொறியாளர் ராமனிடம் கொடுத்தனர்.இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், கடந்த பல மாதங்களாக முறையாக கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை. எங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை இல்லை. அதிருப்தியில் இருந்த கவுன்சிலர்களை சமாதானப்படுத்தக்கூட யாரும், சேர்மன் தரப்பு முயற்சிக்கவில்லை. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை என்பதால், இதுகுறித்து மனு கொடுத்துள்ளோம். கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பார் என, நம்புகிறோம் என, தெரிவித்தனர்.திட்டக்குடி நகராட்சியில் தி.மு.க. சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.