| ADDED : மே 10, 2024 01:18 AM
புதுச்சத்திரம்: விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக, புதுச்சத்திரத்தில் கட்டடங்கள் அகற்றப்பட்டன.விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக, சாலையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேம்பாலங்கள், கல்வெர்ட்டுகள், சிறுபாலம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையோரம் இருந்த வணிக வளாகங்கள், வீடுகள், அரசு கட்டடங்கள் உட்பட பல்வேறு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இந்நிலையில் புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே, இரு பக்கமும் இருந்த கட்டடங்கள் அகற்றப்படாமல் இருந்தது. நிலஎடுப்பு மற்றும் கையகப்படுத்துதல் தாசில்தார் கீதா தலைமையில், மின்வாரிய உதவி இயக்குனர் சரண்யா, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா முன்னிலையில் புதுச்சத்திரத்தில், நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. தகவல் அறிந்த கட்டட உரிமையாளர்கள் கால அவகாசம் கேட்டனர். ஆனால் உங்களுக்கு ஏராளமான அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது, இனிமேல் அவகாசம் தர முடியாது எனக் கூறி, ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி., மூலம் இடித்து அகற்றினர். இதனால் குப்பகுதியில் பரபரப்பு நிலவியது.