தனியார் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே தனியார் இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டேஸ்வரத்தில், தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து, மனைபிரிவு போட்டு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். இதையறிந்த திருக்கண்டேஸ்வரம் காலனி மக்கள், எங்களுக்கு அந்த இடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வாங்கி இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என கூறி, அங்கு குச்சிகள் நட்டு ஆக்கிரமிக்க முயன்றனர்.நேற்று இடத்தின் உரிமையாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு, அந்த இடத்தில் நடப்பட்ட குச்சிகளை பிடுங்கி எரிந்தனர். இதனால், ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்கள் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தனியாருக்கு சொந்தமான இடம் என்பதால் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என, சமாதானம் செய்து அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.