தமிழகத்தில் கடலுார், கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி அதிகம் உற்பத்தியாகிறது. கடலுார் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது.முந்திரி மரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கள் வைத்து காய்ப்பது வழக்கம். வழக்கமாக தை மாதம் முதல் சித்திரை வரையில் முந்திரி சீசன். இந்த காலங்களில் முந்திரி மரங்களில் பூக்கள் வைத்து, காய் காய்த்து, ்கொட்டைகள் வைக்கும். முந்திரி மரங்களில் பூக்கள் வைக்கும்போது, போதுமான அளவில் மழை தேவைப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு, போதுமான மழை இல்லை. இதனால், முந்திரி மரங்களில் வெயில் தாக்கத்தால் பூக்கள் கொட்டி, காய்கள் வைக்கவில்லை. இதனால், முந்திரி உற்பத்தி, கடந்த ஆண்டை விட 30 சதவீதம் குறைந்தாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.உற்பத்தி குறைவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் நிலையில் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில் உலக அளவில் ஆப்பிரிக்கா, கானா, ஐவேரி ஆகிய பகுதியில் உற்பத்தி குறைவின் காரணமாக, இறக்குமதி கொட்டைகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு இறக்குமதி முந்திரிக்கொட்டைகள் ஒரு மூட்டை (80 கிலோ) ரூ. 8,200க்கு விற்ற நிலையில், தற்போது, ரூ. 11ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. இதனால், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் முந்திரியும் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி பகுதி முந்திரிகொட்டைகள் கடந்த ஆண்டு ரூ. 7,200 ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.9,500ஆக உயர்ந்துள்ளது. மூட்டைக்கு ரூ. 2 ஆயிரத்திற்குமேல் விலை உயர்ந்துள்ளதன்காரணமாக பண்ருட்டியில் முந்திரி பருப்புகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.பண்ருட்டியில் தரமான பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்புகள் 1 கிலோ அதிகபட்சமாக டபிள்யூ180 ரகம் 1100ரூபாய்க்கும், மிக குறைந்த ரகமான பிபி ரகம் ரூ. 400க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் முந்திரிக்கு விலையில்லை என கடந்த 10ஆண்டுகளாக விவசாயிகள் கூறிவந்த நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி குறைந்தாலும், முந்திரி கொட்டை, முந்திரி பருப்பு விலை கணிசமாக உயர்ந்துள்ளது, விவசாயிகளை ஆறுதல் அடைய செய்துள்ளது.