மூதாட்டியிடம் செயின் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலை
கடலுார்; ரெட்டிச்சாவடி அருகே கூழ் விற்பனை செய்த மூதாட்டியிடம் 5 சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் அடுத்த புதுக்கடை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அஞ்சலாட்சி 53; இவர் விழுப்புரம்-நாகப்பட்டிணம் புறவழிச்சாலையில் ரெட்டிச்சாவடி அருகே கூழ் விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் அவர் கூழ் விற்பனை செய்து கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், கூழ் வாங்கி குடித்தனர். பின், அஞ்சலாட்சி பாத்திரத்தை கழுவும்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை ஒரு வாலிபர் பறித்துக் கொண்டு பைக்கில் தயாராக இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றார். அஞ்சலாட்சி கூச்சலிட்டும் அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பினர். செயின் மதிப்பு 5 லட்சம் ரூபாய். ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிந்து சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.