| ADDED : ஜன 04, 2024 03:53 AM
கடலுார்: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில், நெற்பயிர்கள் பால்கட்டு பருவத்தில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் இந்த ஆண்டு விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் ஒரு போக சம்பா சாகுபடி செய்துள்ளனர். மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருந்த நிலையில் தென்மேற்கு பருவ மழையை நம்பி, இப்பகுதியில் காலதாமதமாக செப்டம்பரில் பி.பி.டி., என்.எல்.ஆர், கோ 43 ரக நெல் சம்பா சாகுபடியை துவக்கினர்.தென்மேற்கு பருவ மழையும் போதிய அளவு இல்லை. தண்ணீர் பாசனத்திற்கு பற்றாக்குறையால் டெல்டாவில் சம்பா நெல் பயிர்கள் கருகியதால், விவசாயிகள் கவலையடைந்தனர்.பின்னர் பெய்த வடக்கிழக்கு பருவ மழையில் சம்பா சாகுபடியில் களை எடுத்தல், உரம் இடுதல் பணிகளை மேற்கொண்டனர். கடந்த சில வாரங்கள் மேக மூட்டம் காரணமாக நெல் பயிர்களில் பூச்சு தாக்குதல் ஏற்பட்டதால், விவசாயிகள் தங்கள் நிலத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி உலரவிட்டதால், தற்போது சம்பா வயல்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது.சம்பா நெல் பயிர்கள் 100 முதல் 110 நாட்கள் கொண்ட நிலையில் பூ வெளியில் வந்தும், பால் கட்டு பருவத்தில் உள்ளன. இந்நிலையில் தண்ணீர் இல்லாமல் வயல்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வயல்களில் தண்ணீர் இல்லாமல் இருந்தால் நெற்கதிர்கள் பதறாக மாறி மகசூல் குறையும். அறுவடை தொடர்ந்து உளுந்து பயிர் தெளிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.